*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, November 26, 2014

சில உதிரி வார்த்தைகள்...

சூரியச் சாம்பலை
கண்டதாக
சொல்கிறார்கள் சிலர்
தீச்சுடாக் கதிர்களில்
நான்கு மணிகொண்ட
கிரீடங்களோடு.

வல்வை வெளிக்காற்று
வாங்கி வைத்திருக்கும்
அந்தரத்து வார்த்தைகளில்
தொங்கியிருக்கும் அந்த ஒளி.

முட்டையிட்டுக் கொண்டிருக்குபோதே
உயிர்விடும் ஓணான்
சேடமிழுக்கும் வதைகுரலில்
சொல்கிறது
அச்சூரியனைத் தானே
கடைசியாய்க் கண்டதாய்.

அவர்களும் நாமும்
கை கோர்த்து நடக்கமுடியா
கைவண்டிகளையே
செதுக்கி வைத்திருந்தான் காலச்சிற்பி
ஒருக்களித்த சில்லுகளோடு.

ஓணானின் வேலியில்
பட்டுத் தெறிக்கும் தீச்சுவாலை
முட்டையில் பட்டு வெடிக்கிறது.

பிசுபிசுப்பாய்
அருவருக்கும் நாற்றமென
மெல்ல நகர்கிறதொரு கூட்டம்
நான் மட்டும்
நடுத்தெருவில் நிர்வாணமாய்.

இப்போதும் புரியவில்லை
சூரியனை எரிக்கலாமா
எரித்தாலும் சாம்பலாகுமா?

தலை தடவிப்போகிறது
இன்றைய வெயிலென்னை!!!

இனிய அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள் ‘அண்ணா’

குழந்தைநிலா ஹேமா

2 comments:

நிலாமகள் said...

சூரியனை எரிக்கலாமா
எரித்தாலும் சாம்பலாகுமா?

விச்சு said...

வாழ்த்துக்கள்...

Post a Comment