*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, August 01, 2014

யாமம்...

யாமக் கவிதைகளை
எழுதத் தொடங்கியிருந்தான்.

மனங்கொள்ளா அலையென
அவன் தரப்போகும் முத்தம்
தோற்றப்பிழையாகி
உச்சுக்கொட்டுகிறது
இப்பொழுதே.

மனம் பிறழ்ந்த
அவன் பிறந்த நாளொன்றில்
எதிர்ப்படும்
விலங்கொன்றைக் கொல்கிறேன்
வன்மத்துடன் கூரிய நகங்களால்.

சொற்குவியலுக்குள்
புதைத்து வைத்த
அற்புதத் தோற்றமாகிறது
என்னை மூச்சிழக்க வைக்கும்
முத்தமொன்று
தருவதாகச் சொன்ன அந்த
ஒற்றை வார்த்தை.

அன்பே...
இனியெப்போதும்
உயிர் பறிக்கும் நிகழ்வொன்றை
ஒத்திரா
உவப்பில்லா
ஆழத் துளைத்தொரு முத்தமிடு
என்னை எரிக்கும்
தீயாய் இருக்குமது.

உன் ப்ரியக் கயிறு
முகரும் இறுக்கத்தில்
தெரிகிறதுன் நேசம்.

நடுங்கும் தேகமதை உப்பிட்டு
கொஞ்சம் பனி தூவி
இருள் மறைத்த
நிலவின் பின் புறம்
நட்சத்திரக் கட்டிலில்
கிடத்தென்னை.

குளிர்காலச் சருகாய்
எனக்கான கரிசனங்களை
இனி உதிர்த்துவிடு
ஒவ்வொன்றாய்...

ஒரு முத்தத்திற்கான
காரணமேதும் தெரிவதில்லை
ஒரு தற்கொலைக்கான
காரணம்போல!!!

குழந்தைநிலா ஹேமா

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

யாமக்கவிதைகள் சொற்பிரயோகம் சிறப்பு!

Post a Comment