*** உப்புமடச் சந்தியில் http://santhyilnaam.blogspot.com/ இன்று >>>>>அகதிகளாக்கப்பட்ட பூர்வீகக் குடியும்-உலக நாடுகளின் இராஜதந்திரப் பயணமும்.*****
*** தோல்வி என்பது தள்ளிப் போடப்பட்ட வெற்றியேதான்.வெற்றி என்பது எவ்வளவு சுகமாக அநுபவமோ அதுபோல தோல்வியும் ஒரு அநுபவமே***

Friday, July 10, 2009

?? ஈழத்தமிழன் ??

நடந்ததெல்லாம் நன்மைக்கே !
நடப்பவையும் நன்மைக்கே !

நமக்கு நாமே மருந்தாகி
கேட்பாரற்றுக் கிடக்க வேண்டியதாயிற்று.
தலை மிதித்து நடந்தவன்
தலையையே எடுக்கத் துணிந்துவிட்டான்.

ஈழத்தமிழன் எடுப்பார் கைப்பிள்ளையாகி
தொங்கு பாலத்தில் நடப்பவனாய் தென்பின்றி.
இரத்த ஆறு உறைந்துவிட்டாலும்
முட்கம்பிகள் இட்ட சர்வாதிகார ஆற்றுக்குள்.

நம்பிக்கை நடைபாதையெங்கும்
முட்கள் நெருடியபடி.
நடை தடுமாறினாலும் நினைவுகள் சீராய்
இருப்பிடம் நோக்கியே.

மௌனமே சுகமாயிருக்கிறது
உலகையே வெறுத்துவிட்ட
இறுமாப்போடு இருக்கிறேன்.
கற்பைக் களவு கொடுத்ததாய் என் தேசம்.
குற்றம் புரிந்தவளாய்
இனி ஒருபோதும் மன்னிக்க முடியாதவளாய் நானும்.

நட்பும் காதலும் உண்மையற்று
நானும் அசுத்தப்பட்டவளாய்
கர்வம் தொலைத்து மௌனித்துக் கிடக்கிறேன்.
ஆசைகள் கொன்று
கவலைக் குழந்தைகள் சுற்றிலும் அழுதபடி.

அர்த்தமற்ற கனவுகளின் மேல் ஆணி அறைந்து
அரற்றியபடி
தொடராத மைல்கல் மேல்
சுமை இறக்க முயன்றபடி.

தப்புத் தப்பாய் விடைகள்.
எப்படித்தான்
கூட்டிக்
கழித்து
பெருக்கிப்
பிரித்துப் பார்த்தாலும்
மீண்டும் மீண்டும்
அதிகமாகவே கழிக்கப்படுவதாய்
தமிழனின் வாழ்வு !!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, July 07, 2009

திரும்பவும் இங்கே...

உதிர்ந்து...அடங்கிக் கிடக்கிறது என் எண்ணங்கள்.
எண்ணச் சருகுகளுக்குள்
ஒளிந்து கிடக்கிறது என் ஓலங்கள்.
தவிப்பின் காற்று அசைத்தாலும்
தத்தளித்துத் தத்தளித்து
படபடத்து விட்டுப் படுத்துக்கொள்கிறேன்.

உங்களையும் என் எழுத்துக்களையும்
மறந்துவிட்டதாய் நினைக்கிறீர்களா நீங்கள்?
எப்படியாகும் அது !
பறவையின் இறக்கைகள்
விட்டுப் பிரிந்தபிறகும்
பறத்தல்போலவே நானும் அலைந்தபடி.

தடுக்கி முட்டி மோதும் அத்தனை திசைகளிலும்
உள் உணர்வின் வலியோடு
பறந்துகொண்டுதான் இருக்கிறேன் இன்னும்.
மனம் பறந்து
முட்கம்பிகளுக்கூடான என் தேசத்தில்.

என்னைமாத்திரம்
ஏதோ என்னையுமறியா
ஒரு இயற்கையின் இயல்பு
ஏந்தியபடியே
திரும்பவும் இங்கே !!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, May 17, 2009

தவிடு தின்னும் தமிழன்...

தூங்கமுடியா...
தூக்க முடியாச் சுமைகளாலே
நோய்களின் இடுக்குப் பிடிக்குள் நான்.
நுரை கக்கிய சவர்க்காரத் துண்டாய்
அடி நீருக்குள் அமிழ்ந்து கிடக்கிறேன்.
எழுத்துக்கள் குமிழியாய் எழுந்து
கண்ணீராய் சுரந்தபடி.

பெருந்துயரப் பாம்பொன்று என்னை
விழுங்கியும் கக்கியுமாய்.
அடங்காமல் மீண்டும்...மீண்டும் பற்றியெரியும்
போர்த்தீயின் சுவாலை
உடலையும் உள்ளத்தையும் சுட்டபடி.

என் இனத்தின் அவல ஓலம்
இரைச்சலாய் செவிப்பறை தெறிப்பதாய்.
இரத்த ஆற்றைக் கடக்கும் போட்டியில் என் உறவுகள்.
நீ...ண்டகாலக் காய்ந்த இரத்த வாடையில்
நனைந்தும் ,உணர்ந்தும் ,கேட்டுமான மன ஓலங்கள்
இரவில்கூட அசந்து உறங்காதபடிக்கு.

கால்நடைகளுக்குக்கூட இடைநேரத் தீனி போட்டவன்.
வரும் விருந்து காத்திருந்து
வரவேற்ற வன்னித் தமிழன்-இன்று
தவிடு தின்னும் இனமாய்.
தான் தவழ்ந்த மண்ணே தன் காயத்து மருந்தாய்.
எலும்பில் தோல் தடவிய மனித எச்சக் குவியல்கள்
குமுறும் மனதால் மறக்க இயலவில்லை.

தீர்ப்பின் முட்டைகளுக்குள்
உயிர்கள் முழி பிதுங்கியபடி.
உடைக்கும் சொண்டுகள்
அலட்சியமாய் அல்லது திராணியற்றதாய்
அல்லது விலங்கிடப்பட்டதாய்.

சமாதானப் பருந்துகள்
ஒவ்வொரு முறை பறக்கையிலும்
இலவங்காய்க்காய் காத்திருக்கும் கிளியாய்
கிழிந்துவிடும் என் மனம்.
பனியின் விறைப்பை மிஞ்சி
முடங்கிகொள்ளும் ஏமாற்றம்.

உணவின் வாசனை
மூக்கின் நர்ம்புகளை உள் இழுத்தும்
பசியாத வயிறு.
மனம் முட்டிக் கிடந்தும்
எழுத முடியாக் கரங்கள்.

வேண்டுதலா எமக்கு.
பைத்தியமா எங்களுக்கு.
அடுத்த வீட்டிற்க்குக் கூட
கரைச்சல் தராத நாங்கள்
அடுத்தவன் நாட்டுத் தெருவில் கூச்சல் போட.
அதற்கா வந்தோம் அகதி முகவரி தேடி.
உண்ணாவிரதமும்...ஊர்வலமும்
கொடிகளும்...கூச்சல்களும் எதுவரை!
காக்கும் கரங்கள் எதுவுமின்றி.
இரங்கி எம்மை உணர மறுக்கும் உள்ளங்கள் இன்றி.

கனதூரம் கடந்த பின்னும்
என் தேசத்தின் திசையிலேயே என் மனப்பறப்பு.
பரிதாபம் பரிகசிக்க படுகிறான் பாடு தமிழன்.
அவலமும் களைத்துவிட
சகிக்கமுடியா அவதியோடு
உணர்விழந்து தவிக்கிறது என் புலம்பல் !!!

அன்பின் என் இனிய நண்பர்களுக்கு,
மனம் சரியில்லை.அதனால்தான் உங்கள் தளங்களைப் பார்க்கவோ
பார்த்துப் பின்னூட்டம் இடவோ மனமும் நேரமும் இல்லாத நிலை.
மன்னித்துக்கொள்ளுங்கள்.அதோடு இன்னும் ஒரு மாத விடுமுறையில் கனடா போகிறேன்.வந்து எப்பவும்போல குழந்தைநிலாவில் சுறுசுறுப்போடு சந்திப்பேன். உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.

ஹேமா(சுவிஸ்)

Tuesday, April 28, 2009

வேண்டும் ஒரு சிற்பியும் ஒரு உளியும்...

கணங்கள் சுருங்கி
மனதை வறுத்தெடுக்கிறது உயிர்.
கால் தாண்டும் பிணங்கள்
பார்த்த முகங்களா
என்று கூடக் கவனிக்க
சுரணையற்று
நேரமற்று
இரத்தச் சகதிக்குள்
புதைத்த கால்களை
இழுத்தெடுத்துக் கொண்டு.

அன்றும் கூட அப்படித்தான்
இழுத்தெடுக்கையில் ஒரு விரல்
அகப்படும் ஒரு முகம்
அது தெரிந்து அறிந்ததாய் கூட
முனகிக் கொண்டிருந்தது.
என்றாலும் பேய்கள் துரத்த
வேகமாய் ஓடிக்கொண்டே இருக்கிறது அவலம்.

தீபாவளிக்கு வெடி கொளுத்தினால் கூட
பயந்த எம் சரீரம்,
பென்னாம் பெரிய குண்டுகளையும்
வெடிச் சத்தங்களையும் சுமந்தபடி
பயத்திற்கே தைரியம் சொல்லிக்கொண்டு
தீவின் கரைகள் எங்கும்
நாட்டின் நரம்புகள் எங்கும்
மிருகங்களைச் சிநேகமாக்கியபடி
பசியும் ,தாகமும்,தூக்கமும் ,படிப்பும்
பாசமும் தூரமாகி...அந்நியமாகி
அம்மா...அண்ணா என்கிற ஏக்கங்களை
மூட்டை கட்டி விட்டு
மூச்சுவிடச் சுதந்திர உலகம் தேடி
இழந்த உயிர்களுக்கும் உறவுகளுக்கும் ஈடாய்
ஏதோ ஒன்றை எடுத்துக்கொள்ளலாம்
என்கிற நப்பாசையில்.

நாலு பக்கமும் கடல் சூழ
நடுவில் ஒரு சிரங்கை மண்ணுக்குள்
மண்ணுக்காகவே உயிர் பலிகள்.

கேட்டது கிடைக்கவில்லை.
கிடைப்பதோ திருப்தியில்லை.
குண்டுகளும் ஆயுதங்களும்
துளைத்து உடைக்கிற கற்களா தமிழன்!
இறுகிக் கிடக்க வேண்டியதாயிற்று.
எங்களைச் செதுக்க ஏன் ஆயுதங்கள்.
கை தேர்ந்த ஒரு சிற்பியும்
கூரிய ஒரு உளியும் போதாதா !!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, April 21, 2009

உலகத் தமிழா ஒன்று சேர்...

என் பூமியின் புழுதிக் குளியலிலேயே
பூப்பின் புனிதம் ஆனது என் தேகம்.
இப்போ...
கந்தக பூமியாய் அது
சுடுகாடாய் அது
மனிதன் வாழமுடியா மண்மேடாய் அது.
பிணக்காடு கடந்து
இரத்த ஆறு தாண்டியே
விலங்கிட்ட என் தமிழ்த்தாயை
தூர நின்று தரிசிக்கிறேன்.
கண்ணீர் கூட வற்றியவளாய்
பேதலித்துப் பிதற்றியபடி.

தோழா கொஞ்சம் நில்...கவனி
பறக்கும் நிலை தவிர்.
உன் சிறகு முறி.
அல்லது மடக்கி வை.
எங்களுக்கான இறுதி மணித்துளிகளின்
எல்லையில்தான் இன்றைய எம் பயணம்.
தனியாகப் பறக்கும் சக்தியைக்
சற்றுப் புறம் தள்ளு.
உனக்கு....இன்று
தனித்துப் பறத்தல் அவசியமற்றது.
கை கோர்த்துக்கொள்.
நடப்பது ஒன்றே
இப்போதைக்கு எமக்குத் தேவையானது.
கொடு உன் தோழமைக் கரத்தை !!!

ஹேமா(சுவிஸ்)

Monday, April 20, 2009

எம் தேசம்...

தேசம்...
எம் தேசம்
அது என்னவாய்...?

மனிதம் செத்து
மானுடம் மடிந்த படி.
புத்தன் வாழ்ந்த
சத்திய பூமியா-இல்லை
பேய் பிசாசுகளின
சுதந்திர தீவா.
மயிர் கொட்டியின்
உயிரை விடக்
கேவலமாய்...

தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்
என்றானே பாரதி.

இன்று...
என் தேசத்தில்
பட்டினிச் சாவு
நித்தமும்...
நச்சு பூச்சியை
நசிக்கக் கூட
நெஞ்சில் வலி,
எம் தேசத்தில்-இன்று
எத்தனை உயிர்கள்
எத்தனை விதமாய்.

புத்தனும் போதித்திருக்க
மாட்டான்
பதவிக்காக
பட்டினிக் கொலையும்,
மண்ணுக்காக
மனித படு கொலையுமாய்
அஃறினையாய்
உயர்தினையாய்
எத்தனை உயிர்கள்.
எம் தேசத்தில் மாத்திரம்
எழுதினானா
ஒரே நாளில்
உயிர் பறிக்க
பிரமன்.

சொறிந்த புண்ணையே
சொறிந்து சொறிந்து
சீழ் வடிய வடிய
மூடிக் கட்டிய
வேட்டியும் சால்வையுமாய்
சிம்மாசனத்தில்...
மாறிய உருவங்களும்
மாறாத மனங்களுமாய்
அரக்க வம்சங்கள்
எம் தேசத்தில்.

தாயே...
என் தேசத்துத் தாயே
உன் கை ஒடித்து,
கால் முறித்து,
உன்
பிஞ்சுக் குழந்தை
குரல்வளை நெரித்து,
உன்
நெஞ்சு மிதித்தே
நடக்கிறார்கள்.

மனிதம் தொலைந்து
ஒளிந்து கொண்டது
புத்தனின்
முதுகிற்குப் பின்னால்.
பொறுமைக்குப்
பொருள் தெரியா
அகராதி அவர்களது.

காலங்கள் எத்தனை
அவலங்கள்
பார்த்தபடி...
பேச்சு வார்த்தை...
பேச்சு வார்த்தை...
யார் யாரோடு ???
"சப்" என்று
காதுக்குள் வலியெடுக்கும்
பொய் வாய்ப்பாடுகள்
வெளி நாடுகளுகளோடு.

வயோதிபர் மடங்கள் போல
விதவை மடங்கள்...
அநாதை மடங்கள்...
மடங்காய்...
இரு மடங்காய்...
மும் மடங்காய்...
முட்டி வழியமுன்
முடிவெடு தாயே
முடிவெடு
காப்பாற்று
உன் தேசத்தை !!!

வன்னியின் 'பாதுகாப்பு வலய' பகுதியிலிருந்து வெளியேறிச் சென்று நேற்று இரவு தன்னிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை மனிதக் கேடயங்களாக முன்னிறுத்தி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வின் போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான இனஅழிப்புத் தாக்குதலில் இன்று திங்கட்கிழமை 1,496 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.இவர்களில் 476 பேர் சிறுவர்கள்.

ஹேமா(சுவிஸ்)