நடந்ததெல்லாம் நன்மைக்கே !நடப்பவையும் நன்மைக்கே !
நமக்கு நாமே மருந்தாகி
கேட்பாரற்றுக் கிடக்க வேண்டியதாயிற்று.
தலை மிதித்து நடந்தவன்
தலையையே எடுக்கத் துணிந்துவிட்டான்.
ஈழத்தமிழன் எடுப்பார் கைப்பிள்ளையாகி
தொங்கு பாலத்தில் நடப்பவனாய் தென்பின்றி.
இரத்த ஆறு உறைந்துவிட்டாலும்
முட்கம்பிகள் இட்ட சர்வாதிகார ஆற்றுக்குள்.
நம்பிக்கை நடைபாதையெங்கும்
முட்கள் நெருடியபடி.
நடை தடுமாறினாலும் நினைவுகள் சீராய்
இருப்பிடம் நோக்கியே.
மௌனமே சுகமாயிருக்கிறது
உலகையே வெறுத்துவிட்ட
இறுமாப்போடு இருக்கிறேன்.
கற்பைக் களவு கொடுத்ததாய் என் தேசம்.
குற்றம் புரிந்தவளாய்
இனி ஒருபோதும் மன்னிக்க முடியாதவளாய் நானும்.
நட்பும் காதலும் உண்மையற்று
நானும் அசுத்தப்பட்டவளாய்
கர்வம் தொலைத்து மௌனித்துக் கிடக்கிறேன்.
ஆசைகள் கொன்று
கவலைக் குழந்தைகள் சுற்றிலும் அழுதபடி.
அர்த்தமற்ற கனவுகளின் மேல் ஆணி அறைந்து
அரற்றியபடி
தொடராத மைல்கல் மேல்
சுமை இறக்க முயன்றபடி.
தப்புத் தப்பாய் விடைகள்.
எப்படித்தான்
கூட்டிக்
கழித்து
பெருக்கிப்
பிரித்துப் பார்த்தாலும்
மீண்டும் மீண்டும்
அதிகமாகவே கழிக்கப்படுவதாய்
தமிழனின் வாழ்வு !!!
ஹேமா(சுவிஸ்)







