*** உப்புமடச் சந்தியில் http://santhyilnaam.blogspot.com/இன்று*****நான் ஒரு படம் பாத்தன்.*****
***** "ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு.ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு.உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை.அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது.ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது."****"மண்ணின் விடுதலைக்காக உயிர் தந்த அத்தனை உயிர்களுக்கும் தாழ் பணிந்த என் வணக்கம்." *****

Friday, November 27, 2009

தோழா நீ எங்கே...

தோழா...
எமக்கான தேவைகளை
சமாதானத்திற்கான வார்த்தைகளை
எமக்காகப் பேசி
பார்வைகளால் விதை தூவி
பயிரிட்டவன் நீ
எங்கே நீ !

கொஞ்ச நாட்களாக நீயின்றி
பரிதவித்து நீரின்றி வறண்டு
வரப்புகளில் ஆடும் மாடுமாய்
நத்தைககளும் ஊர
களைகளுக்குள்
அகப்பட்டுக் கிடக்கிறோம்
தோழா எங்கே நீ!

என் அம்மா சொன்னா
பாட்டி சொன்னா
பாலுக்கு அழுதேனாம்
பட்டுப் பாவாடைக்க்கும் அழுதேனாம்
உனக்கும் அதுபோலவே
ஆசைகள் இருந்திருக்குமே !

என்றாலும் தீராத வெறியோடு
எமக்கான பாதைகளைச் சீர் திருத்தி
இடைவெளிகளை நிரப்பிச் செப்பனிட்டு
ஒற்றைச் சீருடையோடு மட்டும்
கல்லறைத் தோழர்களோடு
உன் உணர்வுகளைப்
பகிர்ந்து கொண்டிருந்தாயே
இப்போ கொஞ்ச நாளாய்க் காணோமே
எங்கே நீ !

முன்பும் பலமுறை
தொலைந்து தொலைந்து
மீண்டும்
கிடைத்திருக்கிறாய் எங்களுக்கு.
இப்போ பலநாட்கள் ஆகியும்
பதுங்கு குழிகள் மூடப்பட்டும்
விதையுண்ட வீரர்களின்
நினைவுத் தூண்கள்
இடியுண்ட பின்னாலும்
இன்னமும் காணோமே உன்னை.
தோழா எங்கே நீ !

அந்தரத்தில் எம்மை விட்டு
பலியாடாய் ஆக்கிவிட்டு
போதுமடா சாமி என்று போவாய்
கனவிலும் பறைந்திருக்க மாட்டோமே.
தமிழீழம் தாங்கி நின்று
வழி காட்டி பாதை வெட்டி
வீரனாய் விழித்திருந்த தோழா எங்கே நீ!

வாரயோ ஒரு நிமிடம்
உன் குரல் தாராயோ ஒரு முறை
எமக்கான சேவகனே...
சென்ற இடம் சொல்லாமல் போனதேன்
இல்லை என்று தெரிந்தபின்னும்
இன்னும் தேறாத மனதோடு
தோழனே காத்திருக்கிறோம்
எங்கே நீ !!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 24, 2009

பிறந்தான் தமிழாய்...பிரபாகரன்

இன்று ஓர் அழகின் பிறந்ததினம்.
அகத்தியக் கமண்டலத்துள்ளும்
அடக்கமுடியாச் சொற்களாய்
அவன் பெயர் அழகாய்.

தேரோட்டும் தலைவனாய்
தென் பொதிகைத் தமிழாய்
நெஞ்சுக்குள் பூத்து
அழகாய்த்தான் இருக்கிறான்.

தமிழ்த் தாயின் செல்ல மகன்
உணர்வை உழுதுகொண்டவன்
படுக்கைப் பாயைத்
தானும் சுவீகரித்த புன்னகையோடு.

அவன் முகமும் பால் மணமும்
தும்பியோடு
வண்ணத்துப் பூச்சியின் சிநேகமாய்.
சிந்திய சிரிப்போடு
மலர் கொய்யும் என் தலையில்
அவன் கரங்கள்
வீரப் புண்களின் வடுக்களோடு.

வேர் அறுந்து ஓடி வந்த அகதி நான்.
பிரபஞ்ச முட்டைக்குள்
என்னோடு தஞ்சம் கேட்டுத்
தானும் கம்பீரமாய்.

அழகே இன்னும் ஒருமுறை
பலமுறை
என் கண்ணுக்குள்
என் நெஞ்சுக்குள்
நான் படுக்கும் பாயில்
என் பூமியில்
பூத்தபடியே இரு.

நானும்...
தமிழ்ப்பறவைகளின்
வார்த்தைகளில்
வாழ்த்துக்கள் சேகரித்து
பாடியபடியே
சரிவேன் உன் மடியில் !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, November 20, 2009

கேட்பாரற்ற பொழுதுகளில்...

சில கதவுகள் வேண்டுமென்றே
மூடப்பட்டே...யிருக்கும்.
மூடியிருப்பதாய் மௌனித்துத்
ஏன் திரும்புகிறாய் நீ.

தட்டு எங்கே உன் கைகள் ?
கூப்பிடு எங்கே உன் குரல் ?
கதவின் பின்னால்
யாரும் இறந்திருக்க நியாயமில்லை
இரத்தக் கறைகள் அங்கில்லை.
அங்கு...
உண்மைகளின் யன்னல்கள் மூடப்பட்டே.

கதவுகளும் அதன் இறுக்கங்களும்
சுவர்களும் பருமனும் கடினங்களும்
அவைகளுக்கே இயல்பானவை.
எங்கே தொலைத்தாய்
உன் இயல்பை.

விசாலங்களும் வீடும்
தேவையாயிருக்கிறது உனக்கு.
விடு சிந்தட்டும்
ஒரு துளி இரத்தம் மண்ணில்.
முட்டியில் இரத்தம் தோயும்
கையும் வலிக்கும்
என்றாலும்
முட்ட முட்ட
தட்டத் தட்ட தகரும்.

சுவரோ கதவோ ஏதும்
முன்பு எப்போதும்
இருந்ததில்லை இங்கு.
தர்மம் நிரம்பிய
விசாலமான வெளிதான் முன்பு இங்கே.

பொருத்தப்பட்ட சுவர்களும்
கதவுகளும் யன்னல்களும்
பூச்சட்டிகளும் முளைத்தன
கேட்பாரற்ற பொழுதுகளில் !!!

"போராடினாலும் அழிவோம் தான்.
போராடாவிட்டாலும் அழிவோம் தான்.
ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது"

ஹேமா(சுவிஸ்)

Wednesday, November 18, 2009

இழப்புக்களின் வரிசையில்...

நீ....
அன்றைய தினத்தில்தான்
உனக்கென
ஆவேசமான முடிவெடுத்திருப்பாயோ!
காதலிப்பதாகவும் சொல்லிவிட்டாய்.

அதே ஆவேசம்
பயமாய்
கௌரவமாய்
அம்மா முகம் நிழலாட
பிரிந்தும் விட்டாய்.

எப்படி அறிவாய் நீ
என்னையறியாமலே எனக்குள்
நிறைந்திருப்பதை.
காற்றுத் தரும் மரம்
வீட்டுக்குள் வராது என்கிறாய்.
தத்துவத்துள்
காதல் தளும்புகிறது பார்.

உன் அசட்டுத்தனம்தான்
எனக்கும் பிடித்திருந்தது.
பிரிந்தபோது
சிந்தித்திருக்கவில்லை என்னை நீ.
வந்தாய் சொன்னாய் சென்றாய்.
பெரியதொரு பெருமூச்சோடு
நிம்மதியாய் இருக்கிறாய்
அதே ஆவேசத்தோடு.

மிச்ச சொச்சமாய் இருக்கும்
தைரியத்தை
இனிமேலும் ஆவேசமாக்காதே.
சேமித்துக்கொள் புத்திசாலித்தனத்தை.

இன்று...
இப்போ...
இந்த நொடிகூடக் காத்திருக்கிறேன்
ஒரு நிமிடம் பேசவும்
உன் கைக்குள் அடங்கவும்
அழவும்
நானும் ஒரு அசடாய் !!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, November 14, 2009

பழுத்தல் இலை...

புதிய தளிர்கள் பூப்படைய
பழுத்தல் இலையாய்.
தாங்கிய காம்பு தளர்ந்து உலர
இறுக்கிப் பற்றிய
என் தாய் கரம் தவற விட
வெற்று வெளி வானம் தாவி
வேகமாய் அலைகின்ற சருகாய் நான்.

தாயின் காலடி தாண்டி
காற்றின் கைதியாகிப் பறக்கிறது தேகம்.
மூச்சுத் திணறப் பறக்கும் வேதனை விட
நான் வாழ்ந்த மரத்தின்
அடி விட்டுப் பிரிவதே வேதனை.
பயம் பயமுறுத்த
எங்கே விழுவேன் எப்படி ஆவேன்.

வாகன நெரிசலுக்குள்
வெப்பப் புகை கக்கும் பெரும் தெருக்களிலா !
வெப்பக் கற்கள் கோர்த்து
கொத்தனார்கள் கூடிக் கட்டிய
கட்டிடக் காடுகளின் நடுவிலா !
ஈக்களும் கொசுக்களும்
கொஞ்சி கதை பேசி விளையாடும்
குப்பைகள் சேரும் கும்பலிலா !
கரையோடும் தரையோடும்
உரசி நெளிந்து ஓரத்துப் புற்களோடும்
முந்தியோடும் மீன்களோடும்
போட்டி போடும் ஓடுகின்ற தண்ணீரிலா !
மனிதனின் உணவுக்காய்
மேய்கின்ற மாடுகளின் உணவுக் கூடத்திலா !
காடும் மலையும் காதலிக்க
வானம் பார்த்துக் கூச்சம் கொள்ளும்
கானகக் கரைகளிலா !
இல்லை நகரத்தின் நடுவே
கொஞ்சும் குழந்தை ஒன்றின்
பிஞ்சு விரல்கள் பசை தொட்டு ஒட்டுகின்ற
ஓவியப் புத்தகத்திலா !

காற்றே மீண்டும் விடு
என் தாய் மடி.
சருகாய் உக்கி
சாந்தியடையும் என் ஆத்மா.
இல்லை அவலமாய்
அலைக்கழியும் என் ஆவி !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, November 12, 2009

வானம் வெளித்த பின்னும்...

அண்டத்தில்..........
ஞாயிறும் திங்களும்
அருகருகா!?
ஒரே நேரம்
பயணிக்க..சந்திக்க
முடியாமலிருந்தும்..
அருமையாய் வகுத்து
ஆளுக்கொரு வேலையாய்
அவனியை ஆட்கொள்ளும்
அற்புத தம்பதியராய்.

நீலமும் வெண்மையும்
தொட்டதில்லை
ஒன்றையொன்று
இருந்தும்...
போகுமிடமெல்லாம்
தவற
விட்டதில்லை
துணையை.

அகிலத்தில்....
வானம் வெளுக்காமல்..
தூரல்கள் தூங்காமல்..
ஒத்தையாய் புறாவொன்று
ஏன்?
இன்னும் தனிமையா?
இடையில் தொலைந்ததா?
இள மையில் அறுந்ததா?
இல்லை!
இரு கை இறுக்கம் தளர்ந்ததா?
இன்னொன்றின் மேல் படர்ந்ததா?

ஏன்?
தனிமையாய்.........!
வெறுமையை நோக்கி
“உன்”
சிறகுகளுடன்...
எதைத் தேடி.
பயணிக்கின்றாய்!
ஊமைப் புறாவாய் !!!

"வானம் வெளித்த பின்னும்"முகப்புக்காய்
ஆர்வத்தோடு ஆக்கம் இணையத் தோழி கலா.

அவருக்கென்று தளம் இன்னும் இல்லை.என்றாலும் சிங்கையிலிருந்து எப்போதும் என்னை அடிக்கடி ஊக்கப்படுத்தும் ஒரு குரல்.அவருக்கு நன்றி சொல்லும் விதமாகவே இப்பதிவு அன்போடு அவருக்காக.கலா உங்கள் அன்பிற்கு என்னால் இப்போதைக்கு என் அன்பாக !!!

இதே நேரத்தில் தமிழ்நாட்டுத் தோழி "மது"வையும் நினைத்துக்கொள்கிறேன்.உங்களுக்கென்று தளம் இல்லாவிட்டாலும் ஆயிரம் சோகத்துக்குள்ளும் என்னையும் நினைத்து அடிக்கடி ஓடி வருவீர்கள்.இடைவிட்டு மீண்டும் உங்களைக் காண்கிறேன் தோழி.நலம் கேட்டபடி நன்றியும் சொல்கிறேன் !!!

என்னோடு சேர்ந்து நீங்களும் என் தோழிகளை வாழ்த்துங்கள் தோழர்களே.

தமிழ்மணத்திலும் தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.நன்றி.

தூரத்துத் தோழிகள் கலா,மது கைகள் பற்றிய வெப்பத்தோடு
ஹேமா(சுவிஸ்)